Last Updated : 29 May, 2020 08:37 AM

 

Published : 29 May 2020 08:37 AM
Last Updated : 29 May 2020 08:37 AM

சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை: அதிபர் ட்ரம்ப் கருத்து 


இந்தியா, சீனா இடையே பெரிய மோதல் நிலவுகிறது. நான் பிரதமர் மோடியிடம் ேபசினேன். சீனாவுடனான எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

இந்தியாவின் சிக்கிம், லடாக் மாநிலங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீனா தனது ராணுவத்தை குவித்து வருகிறது. அங்கு அந்நாட்டு வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது, இந்தியாவும் எல்லைப்பகுதியி்ல் படைகளை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது

இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோருடன் கடந்த சில நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இப்போது இந்தியா, சீனா எல்லை பிரச்சினையிலும் தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வதாக தெரிவித்தார். இதற்கு இந்தியா தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் வாஷிங்டனில் அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது

இந்தியா-சீனா இடையே மிகப்பெரிய முரண்பாடும்,மோதலும் இருந்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் மக்கள் என்னை விரும்புகிறார்கள். அமெரிக்காவில் ஊடகங்கள் என்னை விரும்புவதைவிட, இந்தியாவில் இருப்பவர்கள் என்னை அதிகமாக விரும்புகிறார்கள். எனக்கும் பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும். மோடி சிறந்த ஜென்டில்மேன்.

இந்தியா-சீனா இடையே மிகப்பெரிய மோதல் நிலவுகிறது. இரு நாடுகளுமே 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாடுகள், இரு நாடுகளிடமும் வலிமையான ராணுவம் இருக்கிறது. ஆனால், எல்லை விவகாரத்தில் சீனா நடந்து கொள்ளும் விதத்தில் இந்தியாவுக்கு மகிழ்ச்சி இல்லை.

நான் பிரதமர் மோடியிடம் பேசினேன். எல்லை விவகாரத்தில் சீனாவுடன் பிரதமர் மோடி நல்ல மனநிலையில்இல்லை” இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்

முன்னதாக புதன்கிழமை பேசிய அதிபர் ட்ரம்ப் இந்தியா-சீனா இடையே எல்லைப்பிரச்சினையை தீர்க்க மத்தியஸ்தம் செயயத்தயார் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து மத்திய அரசு சீனாவுடன் எல்லைப்பிரச்சினை பேச்சு வார்த்தை மூலம் அமைதியாக முறையில் தீர்க்கவே விரும்பவதாகத் தெரிவித்தது

வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “ சீனாவுடன் இருக்கும் எல்லைப்பிரச்சினைகளை இந்தியாஅமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே விரும்புகிறது” எனத் தெரிவித்தார்

ஆனால் அதிபர் ட்ரம்ப் குறித்த பேச்சுக்கு இதுவரை சீனாவிடம் அதிகாரப்பூர்வமான பதில் ஏதும் இல்லை. ஆனால் சீன அரசின் நாளேடான குளோபல் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட கட்டுரையில் “ இந்தியா-சீனா இடையிலான எல்லைப்பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய அதிபர் ட்ரம்ப் உதவி தேவையில்லை.

இருதரப்பு பிரச்சினைகளுயம் இரு நாடுகளும் அமைதியாக பேசித் தீர்க்கும். எல்லையில் அமைதியையும், ஒழுங்கையும் குலைக்கும் நோக்கில் செயல்படும் அமெரிக்காவிடம் இரு நாடுகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x