Published : 29 May 2020 06:41 AM
Last Updated : 29 May 2020 06:41 AM

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்: புதிய திட்டத்துக்கு சீன நாடாளுமன்றத்தில் ஒப்புதல்

தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கில் கொண்டு வரும் திட்டத்துக்கு, சீன நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரம் ஒழிக்கப்பட்டு விடும் என்று விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது ஹாங்காங். எனினும் தன்னாட்சி அதிகாரம் பெற்றதாக உள்ளது. இந்நிலையில், ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. சீனாவின் நெருக்கடியால் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதாக லட்சக்கணக்கான ஹாங்காங் மக்கள் பல மாதங்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தை ஒடுக்கசீனா தனது படையை களமிறக்கியது. இதையடுத்து ஹாங்காங்அரசியலில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும், சுதந்திரமான தேர்தல், போலீசாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்தல்,போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் குறித்துவிசாரணை மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற கோரிக்கைகளோடு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கில் கொண்டு வருவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு சீன நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது. சீன தேசிய மக்கள் காங்கிரசில் (என்பிசி) உள்ள 2,800-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கில் அமல்படுத்த ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆறு பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்தச் சட்டம் ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்டால் பிரிவினைவாத செயல், அரசு அதிகாரத்தை சீர்குலைத்தல், பயங்கரவாதம் போன்ற காரணங்களைக் காட்டிமக்களை கைது செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும், இந்தச் சட்டத்தை நேரடியாக சீன அதிகாரிகளே அமல்படுத்தி, ஹாங்காங்கில் நடவடிக்கை எடுக்கவும் முடியும். இது ஹாங்காங் அரசை ஓரங்கட்டி தானே நடவடிக்கை எடுப்பதற்கு சமம் என்று விமர்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கில் சீனா நேரடியாக அமல்படுத்தினால், இன்னொரு பெரிய போராட்டம் ஹாங்காங்கில் வெடிக்கும் என்று கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x