Published : 28 May 2020 06:36 PM
Last Updated : 28 May 2020 06:36 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: 50% பணியாளர்களுக்கு துபாய் அரசு அழைப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் 50% பணியாளர்களைப் பணிக்குத் திரும்ப அழைத்துள்ளது துபாய் அரசு.

கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 563 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று எண்ணிக்கை 32,532 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை இங்கு கரோனாவால் 255 பேர் பலியாகியுள்ளனர். 16,371 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரான துபாயில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரான துபாயில் அரசுப் பணியாளர்களில் 50% பேர் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அமீரக இளவரசர் ஷேக் பின் முகமத், பணிக்குத் திரும்புவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். மேலும், வணிக நிறுவனங்கள் , ஜிம், திரையரங்குகள் ஆகியவற்றைத் திறக்கவும் ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி அளித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அதிகமான கட்டுப்பாடுகளை ஐக்கிய அரபு அமீரகம் விதித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதுமான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x