Last Updated : 28 May, 2020 08:22 AM

 

Published : 28 May 2020 08:22 AM
Last Updated : 28 May 2020 08:22 AM

உலகில் எந்த நாட்டிலும் இதுபோல் இல்லை: அமெரிக்காவில் கரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது

கரோனா வைரஸ் தொற்றில் சிக்கிச் சீரழிந்த அமெரிக்காவில் உயிரிழப்பு நேற்று எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு ஒரு லட்சத்தைக் கடந்தது, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17.45 லட்சமாக அதிகரித்துள்ளது என்று ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹானின் பிறப்பிடமான கரோனா வைரஸ் அங்கு ஏற்படுத்திய உயிர்ச்சேதம், மனிதர்களுக்கான பாதிப்பைக் காட்டிலும் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அதிக அளவு ஏற்படுத்தி வருகிறது. இதில் மோசமாகப் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான்.

கடந்த ஜனவரி மாதம்தான் இங்கு முதல் கரோனா வைரஸ் நபர் கண்டறியப்பட்டார். பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதும் தீவிரமான எச்சரிக்கை செய்யப்பட்டது. ஏறக்குறைய 4 மாதங்களில் அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் உயிரிழப்புகள் குறைவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்து, கரோனா வைரஸின் வீரியத்தைக் குறைத்து மதிப்பிட்ட அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் 2 லட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் என்று தெரிவித்தார். அதன்பின் தன்னுடைய கணிப்பை மாற்றி 60 ஆயிரம் முதல் 70 வரை தான் உயிரிழப்புகள் இருக்கும். தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹைட்ராக்ஸி குளோராகுயின் மாத்திரைகள், வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஆனால், அதிபர் ட்ரம்ப்பின் கணிப்பை மீறி அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வந்தது. அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி அமெரிக்காவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்து 45 ஆயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளது. 4.90 லட்சம் பேர் இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளளனர்.

உலக அளவில் கரோனாவால் 57 லட்சத்து 88 ஆயிரத்து 928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 57 ஆயிரத்து 426 பேர் உயிரிழந்துள்ளனர். 24 லட்சத்து 97 ஆயிரத்து 593 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் 30 சதவீதம் பேர் அமெரிக்காவில் உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிருபர்களிடம் கூறுகையில், “அமெரிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் உயிரிழப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். இப்போது இருக்கும் உயிரிழப்பைக் காட்டிலும் 25 மடங்கு உயிரிழந்திருப்பார்கள். அமெரிக்காவில் கரோனாவுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றால் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பரிசோதனைகளை அதிகப்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதிபர் ட்ரம்ப் புகழ் குறித்த ஆய்வில் கரோனா வைரஸ் விவகாரத்தில் சிறப்பாகச் செயல்படுவதாக 42 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். 57 சதவீதம் பேர் அதிபர் ட்ரம்ப் கரோனா வைரஸ் விவகாரத்தில் நாட்டை மோசமாக வழிநடத்திவிட்டதாக விமர்சித்துள்ளனர். இதனால் அதிபர் தேர்தல் வரும் நேரத்தில் ட்ரம்ப் புகழ் அடிவாங்கத் தொடங்கி கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x