இந்திய- சீன எல்லைப் பிரச்சினை; மத்தியஸ்தம் செய்த தயார்: ட்ரம்ப் அறிவிப்பு

இந்திய- சீன எல்லைப் பிரச்சினை; மத்தியஸ்தம் செய்த தயார்: ட்ரம்ப் அறிவிப்பு
Updated on
1 min read

இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

சிக்கிம், லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு அந்நாட்டு வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக இந்தியா தரப்பில் புகார் கூறப்படுகிறது. அவர்களை சமாளிக்க இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே சீன வீரர்கள் நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்கவும், போருக்கான ஆயத்த நிலையில் இருக்கவும் வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் சீன அதிபர் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் இந்திய எல்லையில் ஒட்டுமொத்த நிலைமைகள் சீராகவும் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தநிலையில் இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இருநாடுகளுக்கும் இடையே எல்லை தொடர்பாக பிரச்சினை ஏற்படும் சூழலில் நாங்கள் தலையிட்டு மத்தயஸ்தம் செய்ய தயாராக உள்ளோம், இதனை இருநாடுகளிடமும் நாங்கள் தெரிவித்து விட்டோம் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in