Published : 27 May 2020 03:35 PM
Last Updated : 27 May 2020 03:35 PM

கரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் பலி

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை அமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலக வல்லரசான அமெரிக்கா, கடந்த 2 மாதங்களாக கரோனா தொற்றினால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. கரோனா தொற்றையும், பலியையும் கட்டுப்படுத்தாமல் ட்ரம்ப் நிர்வாகம் திணறி வரும் சூழலில் அமெரிக்காவில் மட்டும் கரோனாவில் 1,00,572 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 17, 25,275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களும் இனி வழக்கமாகச் செயல்படுவதற்கான முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அரசின் இந்தச் செயல் அதிக அளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனாவுக்கான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 4,79,969 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பரவியது என்று சீனா கூறி வருகிறது. ஆனால், கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா கூறி வருகிறது.

கரோனா வைரஸைக் கையாண்ட விதத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லை. உலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளாதார இழப்புக்கு சீனாதான் பொறுப்பேற்க வேண்டும். சீனாவிடம் இருந்து இழப்பீடு பெறுவற்காக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஆனால், எங்கள் மீது அமெரிக்கா தொடுக்கும் சட்ட நடவடிக்கையை ஏற்க முடியாது என்று சீனா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x