Published : 27 May 2020 07:09 AM
Last Updated : 27 May 2020 07:09 AM

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி- பொருளாதார சரிவில் இருந்து தப்புமா சிங்கப்பூர்?

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்து வந்த சிங்கப்பூர், இன்று மாபெரும் பொருளாதார சரிவைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது.

கரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில், வர்த்தகம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் சிங்கப்பூரும் இதற்கு தப்பவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார சரிவைச் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,343. இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து பணி செய்ய சிங்கப்பூர் வந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் பெரிய டார்மிட்டரிகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். இதனால் தொற்று எளிதில் பரவி வருகிறது. இதன் எதிரொலியால் சிங்கப்பூர் தொழில்துறை வெகுவாகப் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

4-7 சதவீத சரிவு?

சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கைப்படி பொருளாதார சரிவு 4-7 சதவீதமாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு 1-4 சதவீதமாகக் கணிக்கப்பட்டிருந்தது. இதற்குமுன் டாட்காம் வீழ்ச்சியின் போது 2001-ல் 1.1 சதவீதம் சரிவு கண்டது. அதன்பிறகு பெரிய அளவில் பொருளாதார சரிவு சிங்கப்பூரில் ஏற்படவில்லை.

கப்பல், கட்டுமானம், பொறியியல் ஆகிய துறைகளில் பெரிய அளவில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்படும் எனஅமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் பொருளாதார செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதால் சிங்கப்பூருக்கான வர்த்தக வாய்ப்புகள் எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

நிறுவனங்கள் பாதிப்பு

ஏப்ரல் 7-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டன. இதனால் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் சூழல் இல்லாத நிறுவனங்கள் பலவும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. வர்த்தக பாதிப்பு,பணியாளர்கள் தட்டுப்பாடு, உற்பத்தி பாதிப்பு எனப் பொருளாதாரம் அடிவாங்கியிருக்கிறது.

இந்நிலையில், வரும் ஜூன்2 முதல் படிப்படியாக பொருளாதார செயல்பாடுகளைத் தளர்த்தசிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x