

ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களுடன் செய்துகொண்ட போர் நிறுத்தத்தின்படி 900 தலிபான்களை விடுவிக்க உள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “தலிபான்களின் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி சுமார் 100 தலிபான்கள் திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) 900 தலிபான்கள் விடுவிக்கப்பட உள்ளனர். எனினும் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களது நிபந்தனைகளை ஏற்பதாக சமீபத்தில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த விடுதலை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.