Published : 25 May 2020 09:09 PM
Last Updated : 25 May 2020 09:09 PM
ஜப்பானில் கரோனா தொற்று வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், கரோனா பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது.இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே கூறும்போது, "கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு சில அளவுகோல்கள் வைத்திருந்தோம். அவற்றை தற்போது பூர்த்தி செய்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறோம். இனி, மக்கள் புதிய வாழ்க்கை முறைக்குத் தயாராக வேண்டும். கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலமே தொற்று மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்” என்று தெரிவித்தார்.
அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானில் கரோனா தொற்று எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. இதுவரையில் ஜப்பானில் 16,581 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 830 பேர் பலியாகியுள்ளனர்.
ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் ஜப்பானில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் 6 முக்கிய பிராந்தியங்களில் ஊரடங்குக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. அடுத்த சில நாட்களில் ஊரடங்குக் கட்டுப்பாடு நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டது.
பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தொழில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் படி அறிவுறுத்தப்பட்டனர். ஊரடங்குக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இந்த நிலையில் ஜப்பான் அதன் தனித்துவமான வழிமுறைகளைக் கொண்டு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி இருக்கிறது என்று ஜப்பான் பிரதமர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT