Published : 25 May 2020 08:18 PM
Last Updated : 25 May 2020 08:18 PM

கரோனா பாதிப்பு குறைந்தது: ஆஸ்திரேலியாவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று முற்றிலும் குறைந்துள்ள நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய இரு மாநிலங்களில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன. அங்குள்ள லட்சக்கணக்கான குழந்தைகள் நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளுக்குத் திரும்பினர்.

ஏற்கெனவே மேற்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய மாகாணங்களின் வட பகுதியிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய இரு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து குயின்ஸ்லாந்து மாகாண பிரீமியர் அனாஸ்டாசியா பாலாஸ்குக் கூறியபோது, ''உடல்நலக் குறைவு அறிகுறி தென்பட்டால் வீட்டில் இருக்கும்படி ஆசிரியர்களும் மாணவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நாம் இன்னும் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. எனவே, வருகிற ஒவ்வொரு நாளையும் மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். தொடர்ந்து தொற்றுப் பரவலைத் தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

கரோனா பரவலைக் கட்டுப்பட்டுத்த பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இணைய வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

விக்டோரியா, டாஸ்மானியா ஆகிய இரு மாகாணங்களிலும் ஆஸ்திரேலிய தலைநகரப் பகுதியிலும் வரும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய இரு மாநிலங்கள் அதன் பள்ளிகளைத் திறந்தாலும், அம்மாநில எல்லைகள் இன்னும் திறக்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவில் இதுவரையில் 7,118 பேருக்கு கரோனா தொற்று ஏற்படுள்ள நிலையில், 6,532 பேர் குணமாகியுள்ளனர். 102 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x