கரோனா பாதிப்பு எதிரொலி: பிரேசிலுக்கு அமெரிக்கா பயணத் தடை

கரோனா பாதிப்பு எதிரொலி: பிரேசிலுக்கு அமெரிக்கா பயணத் தடை
Updated on
1 min read

பிரேசிலில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் அந்நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

கரோனா தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் பிரேசிலில் இருந்து மக்கள் வருவதை அமெரிக்கா தடை செய்துள்ளது. இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது

கரோனா தொற்று தீவிரமாக உள்ளதால் ட்ரம்ப் அரசு முன்னரே ஐரோப்பா, சீனா, லண்டன் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்குப் பயணத் தடை விதித்தது. கடந்த வாரம்தான் பிரேசிலுக்கு பயணத் தடை விதிப்பது தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகம் பரீசிலித்து வந்தது. தற்போது பயணத் தடையை உறுதிப்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா தொற்று ஜூன் மாதம் மேலும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவும் அலட்சியமாக நடந்து வருவதாக உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கரோனா நடவடிக்கை தொடர்பாக பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கும் அந்நாட்டு சுகாதாரத்துறை நிபுணர்களுக்கும் இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. கரோனா நடவடிக்கை தொடர்பாக போல்சனாரோவின் கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவித்ததால், சுகாதரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட நெல்சன் டீச்சும் சில தினங்களுக்கு முன் பதவி விலகினார்.

பிரேசிலில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,983 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 92 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in