பாகிஸ்தான் விமான விபத்து; 3 முறை எச்சரித்தும் கண்டுகொள்ளாமல் தாழ்வாக விமானத்தை இயக்கிய விமானி: விசாரணையில் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த வாரம் குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளான பயணிகள் விமானம், மூன்று முறை தாழ்வாகப் பறந்தது குறித்து விமானக் கட்டுப்பாட்டு அறை எச்சரித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

லாகூர் நகரிலிருந்து 91 பயணிகள், 8 ஊழியர்கள் என மொதத்ம் 99 பேருடன் பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தின் பிகே 8303 என்ற விமானம் கராச்சி நகருக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டது.

விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தரையிறங்க சில நிமிடங்கள் இருந்தபோது கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தின் தகவல் துண்டிக்கப்பட்டது.

கராச்சி விமான நிலையத்துக்கு அருகே இருக்கும் மலிர் பகுதியுள்ள மாடல் காலனி குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்து நொறுங்கியதில் 25 வீடுகள் சேதமடைந்தன.

இந்த விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக 2 பயணிகள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். மற்ற 97 பேரும் உயிரிழந்துவிட்டனர். விமானம் கடைசியாக மார்ச் மாதம் ஆய்வு செய்யப்பட்டது. அதன்பின் ஆய்வு செய்யப்படவில்லை என்று முதல்கட்டத் தகவல்கள் வெளியாகின.

இந்த விமான விபத்து குறித்து விசாரிக்க விமானப் போக்குவரத்து விபத்துப் பிரிவு மற்றும் விசாரணை வாரியத்தின் தலைவர் முகமது உஸ்மான் கானி தலைமையில் விபத்து குறித்து விசாரிக்க பாகிஸ்தான் அரசு உத்தரவி்ட்டுள்ளது.

இந்த விசாரணையின் முதல்கட்டத் தகவலில் விமானி நிர்ணயிக்கப்பட்ட உயரைத்தை விடத் தாழ்வாக மூன்று முறை பறந்துள்ளார். அதுகுறித்து விமானக் கட்டுப்பாட்டு அறை எச்சரித்துள்ளது என பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், “கராச்சி விமான நிலையத்திலருந்து 15 நாட்டிகல் மைல் தொலைவில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, 10 ஆயிரம் அடி உயரத்தில் பறப்பதற்குப் பதிலாக 7 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துள்ளது. உடனடியாக கராச்சியில் உள்ள விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தை 10 ஆயிரம் அடி உயரத்துக்கு உயர்த்துங்கள், தாழ்வாகப் பறக்காதீர்கள் என விமானிக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.

இரண்டாவது முறையாகவும் விமானி விமானத்தைத் தாழ்வாக இயக்கியுள்ளார். அப்போதும் விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது, விமானி தன்னால் சரியான தொலைவில் பறக்க முடியும், நிலையைச் சமாளிக்க முடியும், விமானத்தைத் தரையில் இறக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் கூடுதலாக 2 மணிநேரம் 34 நிமிடங்கள் பயணிப்பதற்கான எரிபொருள் இருந்துள்ளது. விமானம் ஒரு மணிநேரம் 33 மணி நிமிடங்கள் மட்டுமே பறந்திருந்தது.

மேலும், 3 முறை விமானி விமானத்தை லேண்டிங் செய்ய முயன்றுள்ளார். அதில் முதல் முயற்சியில் லேண்டிங் ஆகும்போது தரையில் உரசி, தீப்பிழம்புகள் வந்துள்ளன. அப்போது லேண்டிங் கியர் சரியாக வேலை செய்யவில்லை என்று விமானி தெரிவித்துள்ளார்.

முதல் முறை லேண்டிங் செய்வதில் ஏற்பட்ட தோல்வியால், விமானத்தின் எரிபொருள் டேங்க், ஆயில் டேங்கில் ஏதேனும் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், விமானத்தை 3 ஆயிரம் அடி உயரத்துக்குத் தூக்கிப் பறக்க வேண்டும் என்று அறிவுறுத்தியபோது, விமானி 1,800 அடி உயரத்தில் மட்டுமே பறந்துள்ளார்.

தான் 3 ஆயிரம் அடி பறக்க முயற்சித்தாலும் விமானம் 1800 அடிக்கு மேல் பறக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஆதலால், இந்த விபத்து விமானியின் தவறால் நடந்ததாதா அல்லது தொழில்நுட்பக் கோளாறால் நடந்ததா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in