Published : 23 May 2020 06:12 PM
Last Updated : 23 May 2020 06:12 PM
கரோனா பரவலின் இரண்டாம் கட்டத்தைத் தடுக்க, வரும் ஜூன் மாதம் முதல் பிரிட்டனுக்கு வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் பிரிட்டனின் உள்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரிட்டன் உள்துறை செயலர் பிரிதி படேல் கூறும்போது, ”பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகளால் பிரிட்டனில் தொற்று ஏற்படுவதை தவிர்க்க விரும்புகிறோம். நாங்கள் எங்கள் நாட்டின் எல்லைகளை மூடவில்லை. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்துகிறோம்.
ஜூன் 8 முதல், அயர்லாந்து தவிர்த்து, பிற நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்கு தனித்து இருக்க வேண்டும். மீறினால், அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் கரோனா வைரஸ் தீவிரம் அடையத் தொடங்கியதைத் தொடர்ந்து, உலக நாடுகள் தங்கள் எல்லைகளை மூடின. விமான சேவையை முற்றிலும் நிறுத்தின. தற்போது சில நாடுகளில் கரோனா தீவிரம் குறைந்துள்ள நிலையில், அந்நாடுகள் பொருளாதாரச் சூழலைக் கணக்கில் கொண்டு ஊரடங்கை தளர்த்தி அதன் எல்லைகளை படிப்படியாகத் திறந்து வருகின்றன.
சில ஐரோப்பிய நாடுகள் விரைவில் வெளிநாட்டு விமானச் சேவையைத் தொடங்க உள்ள நிலையில் பிரிட்டன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் வெளிநாட்டுப் பயணிகள் வருகை குறையும் என்றும் பிரிட்டனின் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகும் என்று விமர்சிக்கப்படுகிறது.
கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இடத்தில் பிரிட்டன் உள்ளது. பிரிட்டனில் இதுவரையில் 2.5 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. 36,393 பேர் பலியாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT