Last Updated : 23 May, 2020 08:06 AM

 

Published : 23 May 2020 08:06 AM
Last Updated : 23 May 2020 08:06 AM

பாகிஸ்தான் விமான விபத்து: பலி எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு; விபத்துக்கான காரணம் என்ன?

கராச்சியில் விமான விபத்து நடந்த இடத்தி்ல் கூடியிருந்த மக்கள்: படம் ஏஎன்ஐ

கராச்சி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் விமானப்போக்குவரத்தை நிறுத்திவைத்திருந்த பாகிஸ்தான் அரசு, கடந்த வாரம்தான் உள்நாட்டு போக்குவரத்தை இயக்க அனுமதித்தத நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது

லாகூர் நகரிலிருந்து 91 பயணிகள், 8 ஊழியர்கள் என மொதத்ம் 99 பேருடன் பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தின் பிகே8303 என்ற விமானம் கராச்சி நகருக்கு நேற்று புறப்பட்டது

விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தரையிறங்க சில நிமிடங்கள் இருந்தபோது கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தின் தகவல் துண்டிக்கப்பட்டது.

கராச்சி விமானநிலையத்துக்கு அருகே இருக்கும் மலிர் பகுதியுள்ள மாடல் காலனி குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்து நொறுங்கியதில் 25 வீடுகள் சேதமடைந்தன.

விபத்து தொடர்பாக அறிந்ததும் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், போலீஸார் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விமானம் விழுந்த குடியிருப்பு பகுதியில் மக்கள் அடர்த்தி அதிகம், தெருக்கள் குறுகலாக இருந்ததால் மீட்புப்பணிகளை தொடர்வதிலும், தீயை அணைப்பதிலும் பெரும் சிக்கல் நீடித்தது.

இதுகுறி்த்து சிந்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்ரா பெச்சுஹோ கூறுகையில் “ விமான விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 82 பேரின் உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. விமானத்தில் மொத்தம் 32 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 99 பேர் இருந்தனர்.

இந்த விமானம் விழுந்த குடியிருப்பு பகுதிகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. எத்தனை பேர் காயமடைந்துள்ளனார்கள் என உறுதியாகத் தெரியவில்லை. 25 முதல் 30 வீடுகள் வரை விமானம் விழுந்ததில் சேதமடைந்துள்ளன. விமானத்தின் இறக்கை தரையிறங்கும் போது வீடுகள்மீது மோதியுள்ளது” எனத் தெரிவித்தார்

விமானநிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில் “ விமானத்தில் லேண்டிங் கியரில் பிரச்சினை இருந்ததாக விமானி கடைசியாக பேசும்போது ெதரிவித்துள்ளனர். இதைக்கூறிய சில வினாடிகளில் விமானம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து துண்டிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை பாகிஸ்தான் அரசு அமைத்துள்ளது” எனத் தெரிவித்தார்

பாகிஸ்தானின் துனியா நியூஸ் வெளியிட்ட செய்தியில் “விமானம் தரையிறங்கும் முன் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு இரு எஞ்சின்களும் செயலிழந்துவிட்டன. மேடே, மேடே, மேடே(Mayday) என்று சத்தமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கிறது. ஆனால் விமானம் புறப்படும் போது கோளாறுடன் இருந்ததா அல்லது தரையிறங்கும் போது பிரச்சினை ஏற்பட்டதா என்பது குறித்த கேள்விக்கு அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x