என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிடுகிறேன்: ஜமால் மகன்

என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிடுகிறேன்: ஜமால் மகன்
Updated on
1 min read

என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிடுகிறேன் என்று ஜமால் கஷோகியின் மகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜமால் கஷோகி மகன் சாலா கஷோகிஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜமால் கஷோகியின் மகன்களாகிய நாங்கள் எங்கள் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிடுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஜமாலின் கொலை தொடர்பாக அவரது குடும்பத்திற்கு சவுதி அரசாங்கம் இழப்பீடு அளித்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் இந்தத் தகவலை சாலா கஷோகி மறுத்துள்ளார். இந்த நிலையில் இத்தகைய கருத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

இந்த நிலையில் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்தது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித்தது.

இந்நிலையில் ஜமால் மரணத்துக்கு சவுதி தலைவர் என்ற பொறுப்பில் நான் முழுப் பொறுப்பை ஏற்கிறேன். ஆனால் ஜமால் கொலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன் என்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in