ரஷ்யா விவகாரம்: இந்தியா மீதான பொருளாதாரத் தடை நிலுவையில்தான் உள்ளது - அமெரிக்கா

ரஷ்யா விவகாரம்: இந்தியா மீதான பொருளாதாரத் தடை நிலுவையில்தான் உள்ளது - அமெரிக்கா
Updated on
1 min read

ரஷ்யாவிடமிருந்து ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, இந்தியா மீது பொருளாதாரத் தடைவிதிக்கப்படும் என்று அமெரிக்கா முன்னர் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், இந்தியா மீதான பொருளாதாரத் தடை குறித்த தீர்மானம் இன்னும் நிலுவையில்தான் உள்ளது என்றும், இந்திய அரசு ராணுவத் தளவாடங்கள் வாங்குவது குறித்து ராஜதந்திர ரீதியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆண்டு, ஐந்து எஸ்- 400 ஏவுகணைகளை வாங்க இந்தியா ரஷ்யாவுடன் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இந்தியா ரஷ்யாவிடமிருந்து ராணுவத் தளவாடங்களை வாங்கக்கூடாது என்றும் மீறி ஒப்பந்தம் மேற்கொண்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் அப்போது அமெரிக்கா எச்சரித்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி இந்தியா ரஷ்யா உடனான ஓப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்கத் தரப்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் கூறும்போது , ‘இந்தியா ராணுவத் தளவாடங்கள் வாங்குவது குறித்து மிகுந்த திட்டமிடலுடன் முடிவெடுக்க வேண்டும். இந்தியா பொருளாதார ரீதியாக பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. ராஜதந்திரநீதியாக, அரசியல்ரீதியாக பொருளாதாரரீதியாக இந்தியா பொருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

ரஷ்யா ராணுவத் தளவாடங்களை பிற நாடுகளுக்கு விற்று அதன் மூலம் பெரும் நிதியைக் கொண்டு அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன் பொருட்டு அமெரிக்கா ரஷ்யாவின்மீது பொருளாதாரத் தடைவிதித்துள்ளது. ரஷ்யாவிடம் ராணுவத் தளவாடங்கள் வாங்கும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும். இந்தசூழலில்தான் இந்தியா ரஷ்யாவிடமிருந்து ராணுவதளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. எங்களிடம் அதிநவீன தளவாடங்கள் உள்ளன. இந்தியா அதன் முடிவு குறித்து யோசிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in