

பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,091 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 2,193 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,091 ஆக அதிகரித்துள்ளது.
1,017 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இதுவரை பாகிஸ்தானில் 4,29,600 பேருக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் அதிகப்படியான கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் 18,964 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் 6,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அலுசிஸ்தானில் 2, 968 பேர் பாதிக்கபட்டுள்ளனர். இதுவரை பாகிஸ்தானில் 14,155 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தானில் ஒரு நாளைக்கு 25,000 பேருக்கு கரோனாவுக்கான பரிசோதனை செய்யப்படுகிறது.
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் இம்ரான் கான் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்.
ஊரடங்கினால் கடும் பொருளாதார நெருக்கடியையும் பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் தொழில் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தான் சில வாரங்களுக்கு முன்னர் தளர்த்தியது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
பாகிஸ்தானில் வரும் ஜூன் மாதத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.