Published : 21 May 2020 06:52 AM
Last Updated : 21 May 2020 06:52 AM

‘நீயும் சிறிது கண்ணீர் சிந்து’ - முன்னாள் காதலனுக்கு ஒரு டன் வெங்காயம் அனுப்பிய சீனப் பெண்

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது முன்னாள் காதலனுக்கு ஒரு டன் வெங்காயத்தை பரிசாக வழங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஜைபோ நகரத்தைச் சேர்ந்தவர் ஜாவோ. இவரும்அதே பகுதியைச் சேர்ந்த ஜினியாங் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர், அவர்கள் ஒருவரைஒருவர் தொடர்பு கொள்ளவில்லை.

இந்நிலையில், காதல் தோல்வி சோகத்தில் இருந்த ஜாவோ, சீனாவில் கடைபிடிக்கப்படும் காதலர் தினத்தன்று தனது முன்னாள் காதலனுக்கு ஏதேனும் ஒரு வகையில் அதிர்ச்சி தர வேண்டும் என எண்ணினார். அதுவும் வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் எனவும் அவர் விரும்பினார்.

அந்த வகையில், பல்வேறு சந்தைகளுக்கு சென்ற ஜாவோ, அங்கிருந்து ஆயிரம் கிலோ (ஒரு டன்) வெங்காயத்தை வாங்கினார். பின்னர், அவற்றை ஒரு லாரியில் ஏற்றி தனது முன்னாள் காதலனின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

முதலில் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலன் ஜினியாங், ஜாவோ எழுதியிருந்த கடிதத்தை படித்தார். அதில், “கடந்த பல நாட்களாக நான் அழுது வருகிறேன். தற்போது இந்த வெங்காயத்தால் நீயும் சிறிது கண்ணீர் சிந்து” என்று கூறப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தை படித்த ஜினியாங், முகத்தில் எந்த சலனமும் இன்றி அந்த வெங்காய மூட்டைகளை தனது வீட்டுக்கு கொண்டு சென்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அவள் அழுவது குறித்து நான் கவலைப்படவில்லை. அழுது வழியும் ஒருவனாக இருக்கவும் விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார். மேலும், இந்த வெங்காய மூட்டைகளை விற்று எப்படி பணம் சம்பாதிக்கலாம் என யோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. காதல் வலியை வழங்குவதாக நினைத்துக் கொண்டு, தனது முன்னாள் காதலனுக்கு சம்பாதிக்கும் வழியை கற்றுத் தந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x