Published : 20 May 2020 02:18 PM
Last Updated : 20 May 2020 02:18 PM
சில புதிய பகுதிகளுடன் புதிய தேசிய வரைபடத்தை வெளியிட்ட நேபாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி இந்தியாவைத் தாக்கும் விதமாக இந்திய வைரஸ் சீனா மற்றும் இத்தாலி வைரஸ்களை விட கொடியதாக உள்ளது என்று சர்ச்சை உருவாக்கும் விதமாகப் பேசியுள்ளார்.
உலகம் முழுதும் கரோனா வைரஸ் பரவல் 50 லட்சம் மக்களுக்கும் அதிகமானோரைத் தொற்றியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை லட்சத்தையும் கடக்க பலி எண்ணிக்கை 3000த்தைக் கடந்தது. நேபாளத்தில் பாதிப்பு எண்ணிக்கை 402, இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் நேபாள் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஓலி, “இந்தியாவிலிருந்து சட்ட விரோத வழிகளில் நேபாளத்துக்குள் வருபவர்கள் கரோனாவைப் பரப்புகின்றனர். இதற்கு உள்ளூர் பிரதிநிதிகளும் கட்சித் தலைவர்களுமே காரணம். இந்தியாவிலிருந்து இங்கு பலர் முறையான டெஸ்ட் எடுத்துக் கொள்ளாமல் வருவதற்கு இவர்கள்தான் காரணம்.
வெளியிலிருந்து மக்கள் வரத்து அதிகரிப்பால் கோவிட்-19-ஐ கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. இப்போது சீனா, இத்தாலி வைரஸ்களை இந்திய வைரஸ் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. அதிகம் பேர் கிருமித்தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்” என்று பேசியது இந்தியத் தரப்பில் கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதே நாடாளுமன்ற உரையில்தான் பிரதமர் ஓலி, காலாபானி-லிம்பியாதுரா, லிபுலேக் பகுதியை என்ன ஆனாலும் நேபாளுக்குக்கொண்டு வருவோம் என்று பேசினார். இவை இந்தியப் பகுதிகளாகும்.
இந்தியாவும் நேபாளும் 1,800 கிமீ எல்லையைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் 1816-ல் பிரிட்டன் காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து லிபுலேக் கனவாயை தங்களது பகுதி என்று நேபாள் கோரி வருகிறது.
அதே போல் சீனாவுடன் ஏற்பட்ட 1962 போருக்குப் பிறகே இந்தியா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள லிம்பியாதுரா, காலாபானி பகுதியையும் நேபாள் உரிமை கோரி வருகிறது.
மே மாதம் 8ம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தராகாண்டில் உள்ள லிபுலேக் கனவாயை கைலாஷ் மானசரோவருடன் இணைக்கும் சாலையை திறந்து வைத்தார், இதை நேபாள் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து வைரஸ் தங்கள் நாட்டுக்கு பரவுவதாக நேபாள் பிரதமர் கூறி புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT