Published : 14 Aug 2015 04:02 PM
Last Updated : 14 Aug 2015 04:02 PM
பாகிஸ்தானின் பெஷாவார் ராணுவப் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு காரணமான 6 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவப் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் தாலிபான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 148 குழந்தைகள் உள்பட 151 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பெஷாவார் பள்ளி தாக்குதலை அடுத்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனைகளை பாகிஸ்தான் மீண்டும் அமல்படுத்தியது. சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மரண தண்டனை மீதான தடை நீக்கப்பட்டது. அதன் முதல் இதுவரை 200க்கும் அதிகமானவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெஷாவர் கொடூரத் தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான 7 பேர் மீது பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கு மீதான தீர்ப்பில் சம்பவத்துக்கு தொடர்புடைய பயங்கரவாதிகள் 6 பேருக்கு மரண தண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்களை தவிர்த்து கராச்சியில் 2011 ஆம் ஆண்டு ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற செய்தி தொடர்பாளர் அசிம் பஜ்வா உறுதி செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT