Published : 18 May 2020 01:07 PM
Last Updated : 18 May 2020 01:07 PM

கரோனா பரவல் ஆபத்து தெரிந்திருந்தும் மக்களின் வெளிநாட்டுப் பயணங்களை அனுமதித்தது: சீனா மீது அமெரிக்கா மீண்டும் தாக்கு

கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் ஆபத்து தெரிந்திருந்தும் சீனா தனது மக்களை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்திருந்தது என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ட்ரம்ப் சீனாவை கடுமையாக விமர்சித்தார். மேலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் குறித்த தற்போது பேச விருப்பமில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,” சீனாவுக்கு வைரஸ் குறித்து தெரிந்து கொள்ள நிறைய நேரமிருந்தது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அத்தகைய நேரம் இல்லை. தற்போது உலக முழுவதும் வைரஸுக்கு எதிராக போராட தயாராகி கொண்டு இருக்கிறோம்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் ஆபத்து தெரிந்திருந்தும் சீனா தனது மக்களை வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்தது. கரோனா வைரஸ் தொடர்பாக சீனா மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-சீனா இடையே இருந்து வந்த வர்த்தகப் போர் பேச்சு வார்த்தைகள் மூலம் சரியாகாமல் இருந்த நிலையில் கரோனா பாதிப்பினால் இருநாடுகளின் உறவுகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது,

சீனாவின் ஊதுகுழலாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருகிறது என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தி இருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

கரோனா பரவல் தொடர்பாக ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை விமர்சித்து வருகிறார்.

சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை ட்ரம்ப் முன்வைத்தார். அது தொடர்பாக அமெரிக்கக் குழு வூஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால், அமெரிக்காவின் கோரிக்கையை சீனா மறுத்துவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x