Published : 18 May 2020 12:29 PM
Last Updated : 18 May 2020 12:29 PM

ரெம்டெசிவைர் குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, கரோனா அபாயகரமான இருதய ரத்தநாளப் பிரச்சனைகளை உருவாக்குகிறது: கரோனா புதிர்கள்- அமெரிக்க ஆய்வில் தகவல்

அவசரநிலை மருத்துவர்களின் இன்னொரு ஆய்வுக் கட்டுரையில் கரோனா வைரஸ் அபாயகரமான ரத்தநாளப் பிரச்சினைகளான மாரடைப்பு, இருதய செயலிழப்பு, ரத்தக்கட்டு ஆகியவற்றை உருவாக்கி இதன் மூலம் ஸ்ட்ரோக்கை உருவாக்கும் சாத்தியம் கொண்டது என்று எச்சரித்துள்ளனர்.

வர்ஜீனியா பல்கலைக் கழகத்தின் வில்லியம் பிராடி எம்.டி. மற்றும் இவரது சகாக்கள் எழுதிய கட்டுரையில் நுரையீரல், மூச்சுக்குழாய் தொடர்பான சிக்கள்களை ஆராய்ந்துள்ளனர். கரோனாவுக்கு நுரையீரல், சுவாசப்பாதை பிரச்சினைகள் ஓரளவுக்கு வெட்டவெளிச்சமான நிலையில் கரோனாவுக்கும் இருதய ரத்தக்குழாய்ப் பிரச்சினைகளுக்கும் உள்ள தொடர்பு இதுவரை பெரிதாக கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்தக் கட்டுரையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“இதன் மூலம் அவசரநிலை மருத்துவ சிகிச்சையில் இருக்கும் மருத்துவர்களுக்கு கூடுதல் புரிதலை அளிக்கவே இந்த ஆய்வை மேற்கொண்டோம். கோவிட்-19 நோயாளிகள் அதிகம் சிகிசைக்கு வருவதால் உடலில் அவை ஏற்படுத்தும் சிக்கல்கள் குறித்த புதிது புதிதான் புரிதல்கள் சாத்தியமாகின்றன. இப்போது ரத்தக்குழாய் சிக்கல்களை கோவிட்-19 தோற்றுவிப்பது தெரிய வந்துள்ளது, இன்னும் புரிதல்கள் துரிதகதியில் ஏற்பட்டு வருகின்றன. தகவல்கள் வார அடிப்படையில் மாறுகின்றன” என்கிறார் டாக்டர் பிராடி.

மேலும் இவர்கள் எச்சரிப்பது என்னவெனில் கோவிட்-19 நோயாளிகளில் 24% நோயாளிகளுக்கு இருதயம் செயலிழப்பது தெரியவந்துள்ளது என்பதையே. ஆனால் இதற்கு கரோனா பாதிக்கப்படுபவர்களில் 24% இருதய நோயால் பாதிக்கப்படுவார்கள் என்ற பொருளல்ல. கரோனாவின் செயலால் இருதயம் செயலிழக்கிறதா அல்லது இருதய நோய் இருப்பதை ஏற்கெனவே கண்டுபிடிக்காததால் கரோனாவினால் மோசமடைகிறதா என்பது தெரியவில்லை என்கின்றனர்.

மேலும் இருதய நோய் ஏற்பட்டவர்களுக்கு ரத்தக் கொதிப்பு நோயும் இல்லை என்பதும் புரியாத புதிராக உள்ளது என்கின்றனர் இந்த மருத்துவர்கள்.

கோவிட்-19 மற்றும் பிறநோய்கள் உடலில் ஏற்படுத்தும் தீவிர வீக்கம் அல்லது அழற்சிகள் ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்புப் படலங்களை முறித்து இதனால் ஸ்ட்ரோக் ஏற்படவோ மாரடைப்பு ஏற்படவோ வாய்ப்புள்ளது.

மேலும் கரோனாவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் ஒன்றான ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் இருதய ஒத்திசைவுக்காகக் கொடுக்கப்படும் மருந்துகளுடன் ஊடாடும்போது இருதயத்தில் சேதம் ஏற்படுத்துகிறது என்பதோடு இருதய தசைகள் இறுகி ரத்தம் இருதயத்திலிருந்து உடலின் மற்றப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் செயல் தடைபடும்.

ரெம்டெசிவைர் என்ற மருந்து தற்போது தீவிர கரோனா நோயாளிகளுக்கு அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இது குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதோடு இயல்பற்ற இருதயத்துடிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மருத்துவர்கள் இதனைக் கவனமேற்கொண்டு கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

“அதிகம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதால் இந்த புதிய வைரஸ் குறித்த அனுபவமும் விரிவடைகிறது. கரோனாவின் தீங்கான தாக்கம் சுவாசப்பாதையையும் தாண்டிச் செல்கிறது. தொடர்ந்து கரோனா வைரஸ் பற்றி கற்பது எதிர்காலத்துக்கு நல்லது.” என்று பிராடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x