Published : 16 May 2020 02:02 PM
Last Updated : 16 May 2020 02:02 PM

உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 3,07,000 பேர் பலி

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 3,07,000 பேர் பலியாகி இருப்பதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, “உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 3,07,000 பேர் பலியாகி உள்ளனர். கரோனா தொற்றால் அமெரிக்காவில் 87, 530 பேர் பலியாகினர். அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனில் அதிகபட்சமாக 33,998 பேர் பலியாகி உள்ளனர். பிரான்ஸில் 27,532 பேரும், ஸ்பெயினில் 27,459 பேரும், பிரேசிலில் 14, 817 பேரும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் சுமார் 45,38,406 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின்,பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கிறது. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்குச் சவாலாக உள்ளது.

இந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் செய்தியாக உலகம் முழுவதும் சுமார் 17,59,704 பேர் கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x