Published : 16 May 2020 11:50 AM
Last Updated : 16 May 2020 11:50 AM

பிரான்ஸில் கரோனா பலி எண்ணிக்கை 27,529 ஆக அதிகரிப்பு

பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 104 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் கரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 27,529 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 104 பேர் பலியாகினர். இதன் மூலம் பிரான்ஸில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 27,529 ஆக அதிகரித்துள்ளது. இதில் 17,343 பேர் மருத்துவமனையிலேயே இறந்தனர். 10,187 பேர் நர்சிங் ஹோம்களில் உயிரிழந்தனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

பிரான்ஸில் இதுவரை 1,79,506 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் கடந்த 2018, 2019 ஆண்டுகளில் ஏற்பட்ட இறப்பைவிட, 2020 ஆம் ஆண்டின் மார்ச் மற்றும் மே மாதங்களில் அதிகப்படியான இறப்பு ஏற்பட்டுள்ளது. 2020-ல் மட்டும் பிரான்ஸில் சுமார் 1,33,678 பேர் பலியாகி உள்ளனர்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் இரண்டு மாதமாக நிலவிய கரோனா தொற்று பாதிப்பு கடந்த இரு வாரமாகக் குறைந்துள்ளது. கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் சுமார் 8 வாரம் ஊரடங்கு நிலவியது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் 41,02,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3,08,655 பேர் பலியாகியுள்ளனர். 17,59,704 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x