Published : 14 May 2020 07:54 PM
Last Updated : 14 May 2020 07:54 PM

இன்னும் சில ஆண்டுகளுக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்: தென் ஆப்பிரிக்க அதிபர்

ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்ட பிறகும், சில ஆண்டுகளுக்கு மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா அந்நாட்டு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கூறும்போது, “கரோனா வைரஸ் தொற்று இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நம்முடைய வாழ்க்கை முறை முன்பு இருந்ததுபோல் இனி இருக்கப்போவதில்லை. ஊரடங்குக்குப் பிறகு நம் அன்றாடச் செயல்பாடுகள் பெரும் மாற்றங்களைச் சந்திக்கும்.

நம் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள் ஆகியவற்றை மறுகட்டமைப்புச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். தற்போது நாம் மிகக் கவனத்துடன் ஊரடங்கைத் தளர்த்தி வருகிறோம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பிறகும், மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். நம் நாட்டுக்கு என்றில்லை, பிற நாடுகளிலும் இதான் நிலைமை. அந்நாடுகளும் நம்மைப் போல பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஊரடங்கைத் தளர்த்தி வருகின்றன. மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

இதுதான் இனி. உலகம் புதிய இயல்பாக இருக்கப்போகிறது. நாம் கரோனாவுடன் வாழத் தயாராக வேண்டும். வீட்டிலிருந்து வெளியே வரும்போது முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவற்றை இனி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் குறித்து இன்னும் திட்டவட்டமான தகவல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுவரையில் சுய பாதுகாப்பு வழியேதான் கரோனா பரவலை நாம் கட்டுப்படுத்த முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மார்ச் 27-ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஐந்து கட்டமாக ஊரடங்கைத் தளர்த்த இருப்பதாக அதிபர் சிரில் ரமபோசா கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி தற்போது தென் ஆப்பிரிக்கா நான்காவது கட்டத் தளர்வை மேற்கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் தொழில் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். மது விற்பனைக்குத் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் இதுவரையில் 12,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 200 பேர் பலியாகினர்.

”ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா தொற்றும், உயிரிழப்பும் குறைவாக இருந்தாலும், ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று மிதமான வேகத்தில் பரவி வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டல் உயிரிழப்பு மிக அதிகமாக இருக்கும். முதல் ஓராண்டில் மட்டும் 1,90,000 பேர் உயிரிழக்க நேரிடும். அடுத்த சில ஆண்டுகளுக்கும் கரோனா பாதிப்புத் தொடரும்” என்று உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x