Published : 13 May 2020 08:52 PM
Last Updated : 13 May 2020 08:52 PM

கரோனாவிலிருந்து மீண்ட ஸ்பெயினைச் சேர்ந்த 113 வயது மூதாட்டி

ஸ்பெயினில் 113 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் கரோனா தொற்றுக்குள்ளாகி தற்போது குணமடைந்துள்ளார்.

ஸ்பெயினில் மிக அதிக வயதுடையவராகக் கருதப்படுபவர் 113 வயது நிரம்பிய மரியா பிரானியாஸ். இவர் கடந்த 20 வருடங்களாக ஸ்பெயினில் உள்ள முதியோர் காப்பகத்தில் வசித்து வருகிறார்.

ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின் மிகப் பெரிய அளவில் கரோனா பாதிப்பைச் சந்திதுள்ளது. அங்குள்ள முதியவர்கள் பெரும்பாலானோர் கரோனா தொற்றுக்கு உள்ளாகினர். பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 113 வயது நிரம்பிய மூதாட்டி கரோனாவிலிருந்து மீண்டிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் தங்கியிருந்த முதியோர் இல்லத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளான பலர் உயிரிழந்துள்ள நிலையில், மரியா பிரானியாஸ் நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளார்.

இதுகுறித்து அந்தக் காப்பகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியபோது, ''மரியா பிரானியாஸ் கரோனாவை எதிர்கொண்டு உயிர் பிழைத்துள்ளார். தற்போது ஆரோக்கியமாக உள்ளார். கடந்த வாரம் அவருக்கு மீண்டும் கரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்குக் கரோனா இல்லை என்பது உறுதியானது'' என்று தெரிவித்தார்.

மூன்று குழந்தைகளுக்குத் தாயான மரியா பிரானியாஸ், 1907-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாகாணத்தில் பிறந்தார். பத்திரிகையாளரான அவருடைய தந்தை ஸ்பெயினைச் சேர்ந்தவர். முதலாம் உலகப் போரை ஒட்டி அவர்களது குடும்பம் ஸ்பெயினுக்கு இடம்பெயர்ந்தது. அந்த வகையில் ஸ்பெயின் ஃப்ளூ, ஸ்பெயின் போர் உள்ளிட்ட பேரழிவுக் காலங்களுக்கு சாட்சியாக இருந்த மரியா, தற்போது கரோனா காலத்துக்கும் சாட்சியாக மாறியுள்ளார்.

ஸ்பெயினில் இதுவரையில் 2.3 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 27,000 பேர் பலியாகி உள்ளனர். 1.41 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x