Published : 13 May 2020 06:38 PM
Last Updated : 13 May 2020 06:38 PM
ஸ்பெயினில் கரோனா பாதிப்பினால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்ட நிலையில், தற்போது குறைந்து வருகிறது.
இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ”ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 176 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 27,104 ஆக அதிகரித்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்பெயினில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றினால் ஏற்படும் பலி எண்ணிக்கை குறைந்து வருவது மக்களுக்கு ஆறுதல் செய்தியாக அமைந்துள்ளது.
ஸ்பெயினில் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து ஜூன் மாத இறுதி வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் ஸ்பெயினில் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஊரடங்கு மே 4 ஆம் தேதி தளர்த்தப்பட்டது.
முதல் கட்டமாக சிகை அலங்காரக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் மே 11 ஆம் தேதிக்குப் பிறகு மதுபான நிறுவனங்கள் திறக்கப்படும் என்றும் ஸ்பெயின் அரசு முன்னரே அறிவித்திருந்தது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் கரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியது. ஸ்பெயினில் கரோனா தொற்றுக்கு இதுவரை 2,69,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,80,470 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 43,63,042 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,93,348 பேர் பலியாகியுள்ளனர். 16,13,346 பேர் குணமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT