Published : 12 May 2020 01:37 PM
Last Updated : 12 May 2020 01:37 PM

கரோனா அச்சம்: சீனாவில் புதிதாக 16 பேருக்கு தொற்று

சீனாவில் கரோனா வைரஸ் குறித்து இரண்டாம் கட்ட அச்சம் நிலவும் நிலையில், புதிதாக 16 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார அமைச்சகம் தரப்பில், ''சீனாவில் புதிதாக 16 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 15 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு கரோனா தொற்று எந்தவித தொடர்பும் இல்லாமல் ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் நிலை குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா தொற்றால் சிலர் புதிதாகப் பாதிக்கப்பட்டு இருப்பினும்,கரோனா தொற்று ஏற்பட்ட வூஹான், ஹூபே, ஜிலின் போன்ற பகுதிகளில் நோய்த்தொற்று பரவுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் டிசம்பர் மாதம் வூஹான் நகரில் முதன்முதலாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹூபே மாகாணத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவியது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சீன அரசு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியது. ஊரடங்கை அமல்படுத்தியது.

கடும் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸுக்கு 82,919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,633 பேர் பலியாகினர். 78,171 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x