

ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் வடக்குப் பகுதியில் உள்ள தமாவாண்ட் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோ மீட்டர் ஆழம் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்திற்கு தற்போதுவரை ஒருவர் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட முழுமையான பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை .
ஈரானில் அதிகரிக்கும் கரோனா தொற்று
மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா தொற்றால் ஈரான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஈரானில் பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கி கரோனா மார்ச் மாதம் தீவிரத்தை அடைந்தது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று குறைந்த நிலையில், தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.