

கரோனா வைரஸ் தொடர்பாக எங்கள் மீது பழி போடுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் மிகத் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சீனாவில் உள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்று அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார்.
மேலும், செப்டம்பர் 11 தாக்குதலைவிட மோசமான தாக்குதல் அமெரிக்கா மீது நடத்தப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
பிரிட்டன் போன்ற நாடுகளும் சீனாவைக் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங் கூறும்போது, ''கரோனா வைரஸ் தொடர்பாக சீனா மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு உண்மைக்குத் திரும்புங்கள். பல வெளிநாடுகள், விஞ்ஞானிகள் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்திய விவகாரத்தில் எங்களைப் பாராட்டும்போது அமெரிக்கா மட்டும் உண்மைக்கு மாறான தகவல்களை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் 12,63,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.