

கரோனா பரவலைத் தடுப்பதும் அதனைக் கட்டுக்குள் வைப்பதும் இன்னும் சவாலாகவே உள்ளது என்று சீன அதிபர் ஜி ஜின்பிக் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் கரோனாவைக் கட்டுக்குள் வைப்பது தொடர்பாக எதிர்கொண்டு வரும் நிச்சயமின்மையைப் பற்றி பகிர்ந்துகொண்டார். மேலும், கரோனாவால் பாதிப்புக்குள்ளான நிறுவனங்களை மீட்பது குறித்தான திட்டங்களும் அக்கூட்டதில் பேசப்பட்டன.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவில் 6.8 சதவீதம் சரிந்தது. கரோனா வைரஸ் பரவலால் சீனாவில் தொழில்செயல்பாடுகள் முடங்கியிருந்ததால் வேலையிழப்பு, சிறு குறு நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்றிருப்பது, வருவாய் இழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் தொழில் செயல்பாடுகளை மீட்டெடுக்கும் வகையில், நிறுவனங்களுக்கு உத்தர்வாதமில்லாத கடன்கள் வழங்கப்படும் என்றும் வட்டி மற்றும் கடன் செலுத்துவதற்கான கால அளவு நீட்டிக்கப்படும் என்றும் சீன அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் நோய்த் தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில், சீனா அதன் ஊரடங்கை முற்றிலும் தளர்த்தி, இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. வணிக வளாகங்கள், நிறுவனங்கள், போக்குவரத்து என அனைத்தும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளன. சீனாவில் மொத்தமாக 82,883 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 77,911 பேர் குணமாகியுள்ளனர். 4,633 பேர் மரணமடைந்துள்ளனர்.