Published : 02 May 2020 07:49 PM
Last Updated : 02 May 2020 07:49 PM

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் 18 மாதங்களுக்கு மூடல்

உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் மேம்பாட்டுப் பணிகளுக்காக அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு விமானங்களை அனைத்து நாடுகளும் தடை செய்துள்ளன. இந்தச் சூழலை சாதகமாகக் கொண்டு மேம்பாட்டுப் பணியைத் தொடங்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நேற்று நிறுத்தப்பட்டன.

சாங்கி விமானத்தின் இரண்டாவது முனையம் செயல்பாட்டுக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மேம்பாட்டுப் பணிகளுக்காக 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது என்று விமான நிர்வாகத்தின் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட பயணச் செயல்பாடுகள் அனைத்தும், முதல் மற்றும் மூன்றாம் முனையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது முனையத்தில் மேம்பாட்டுப் பணிகளை 2024-க்குள் முழுவதுமாக முடிக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே பணிகள் தொடங்கப்பட இருப்பதால், 2024-க்கு முன்னதாகவே பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் பெரிய விமானம்

நான்கு முனையங்களைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம், ஆசியாவின் மிகப் பெரிய விமான மையங்களில் முதன்மையானதாக விளங்குகிறது. சிங்கப்பூர் இந்தியா வழியிலான பயணிகள் மட்டுமே ஆண்டுக்கு சராசரியாக 35 லட்சம் பேர் இந்த விமான நிலையத்துக்குள் நுழைகின்றனர். மொத்த அளவில் ஜனவரி முதல் மார்ச் வரையில் 11 கோடி பயணிகள் இந்த விமான நிலையம் வந்துள்ளனர். இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33 சதவீதம் குறைவு.

சிங்கப்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,548 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கரோனா தொற்றுக்கு 17 பேர் பலியாகினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x