Published : 01 May 2020 06:57 PM
Last Updated : 01 May 2020 06:57 PM
கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் சுமார் 1 லட்ச அமெரிக்க டாலர்களை யூனிசெஃப் அமைப்புக்கு நிதியாக வழங்கி இருக்கிறார் காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்.
இதுகுறித்து கிரெட்டா துன்பெர்க் கூறும்போது, “காலநிலை நெருக்கடியைப் போல, கரோனா வைரஸ் தொற்றுநோயும் குழந்தைகளுக்கான உரிமையில் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.
இந்த தொற்றால் குழந்தைகள் தற்போதும் மட்டுமல்லாது நீண்ட நாள் பாதிக்கக் கூடும். குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கும், ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், கல்வியைத் தொடரவும் யுனிசெப்பின் முக்கிய பணிகளுக்கு ஆதரவாக அனைவரும் என்னுடன் சேருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த கிரெட்டா துன்பெர்க்
பூமியின் வெப்பநிலை ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் கடந்த ஆண்டு உட்சபட்ச வெப்பநிலையை எதிர்கொண்டன. கரியமில வாயு வெளியேற்றம், சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. சுற்றுச்சூழல் குறித்து எவ்வித அக்கறையுமின்றி, உலக நாடுகள் வரைமுறையின்றி சூழலை மாசுபடுத்தி வந்தன. இந்த நிலை தொடரும்பட்சத்தில் உலகம் கடும் பேரழிவை எதிர்கொள்ளும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்து வந்தனர்.
ஆனால், உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் அறிவியலாளர்களின் கருத்துக்குச் செவி கொடுக்காமல் தொழில் வளர்ச்சியை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ஸ்வீடனைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய கிரேட்டா துன்பெர்க், உலக நாடுகளின் அலட்சியப் போக்குக்கு எதிராக பள்ளி செல்வதைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து தற்போது கிரேட்டா காலநிலை செயற்பாட்டாளராக அறியப்படுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT