

பிரான்ஸசின் ஒன்றிணைந்த பகுதியான ரீயூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் மாயமான எம்எச்370 விமானத்தினுடையது என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதிபடுத்தியுள்ளார்.
இது குறித்து மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "இன்றுடன் எம்எச்370 விமானம் மாயமாகி 515 நாட்கள் ஆகின்றன. ரீயூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட றெக்கை, மாயமான மலேசிய விமானத்தினுடையது என்பது உறுதியாகி உள்ளதை மிகவும் இறுக்கமான மனநிலையோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
மலேசிய விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம்எச்370 விமானத்தில் பயணித்தவர் அனைவரது உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்திகொள்கிறோம்.
விமானம் மாயமானதிலிருந்து முதல் முறையாக மிகப் பெரிய திருப்புமுனையான ஆதாரம் கிடைத்துள்ளது. இந்த நிலையிலிருந்து மர்மம் தீரும் வகையில் மேலும் தீர்க்கமான தகவல்கள் அல்லது பாகங்கள் அதே இடத்தில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது. "
மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்எச்370 விமானம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மாயமானது.
மலேசியா ஏர்லைன்ஸைச் சேர்ந்த எம்எச்370 விமானம் என்ற விமானத்தில் பயணம் செய்த 239 பேரோடு மர்மமான முறையில் காணாமல் போய் ஓராண்டைத் தாண்டியும் குறிப்பிடத்தக்க எந்த தகவலும் கிடைக்காமல் மர்மம் நீடித்தது.
பல நாடுகளின் உதவியோடு வல்லுநர்களை கொண்டு விமானம் குறித்த விவரங்கள் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜூலை 29ம் தேதி விமானத்தின் றெக்கை ரீ யூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.