Published : 27 Apr 2020 06:42 PM
Last Updated : 27 Apr 2020 06:42 PM

30 லட்சம் பேர் பாதித்த நிலையில் ஊரடங்கைத் தளர்த்தத் தயாராகும் உலக நாடுகள்

உலகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு நாடுகள் ஊரடங்கைத் தளர்த்த முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,04,116 ஆக அதிகரித்துள்ளது. 2,07,118 பேர் பலியாகியுள்ளனர். 8,82,770 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலக வல்லரசான அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சுமார் 9,87,322 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 55,415 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவைத் தொடர்ந்து கரோனா தொடர்பான இறப்பில் இத்தாலி இரண்டாம் இடம் வகிக்கிறது. இத்தாலியில் 1,97,675 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,644 பேர் பலியாகியுள்ளனர்.

ஸ்பெயினில் கரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து அங்கும் மெல்ல, மெல்ல ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. குழந்தைகளை பெற்றோர்கள் வெளியே அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கரோனா தொற்றால் அதிக உயிரிழப்பைச் சந்தித்த இத்தாலியில் மே 3 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே 19 ஆம் தேதி முதல் இத்தாலியில் அருங்காட்சியம், நூலகங்கள், திறக்கப்பட இருப்பதாகவும், ஜூன் 1 ஆம் தேதி முதல் உணவகங்கள், சலூன் ஆகியவை திறக்கப்பட அனுமதிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் சில மாகாணங்களில் குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரான்ஸில் ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து இந்த வாரம் முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் 1,62,100 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x