Published : 27 Apr 2020 08:36 AM
Last Updated : 27 Apr 2020 08:36 AM

இனி முழுநேரப் பணி; கரோனாவில் இருந்து மீண்டு அலுவலகம் வந்த போரிஸ் ஜான்சன்: கரவொலி எழுப்பி வரவேற்ற ஊழியர்கள்

கரோனா தொற்று ஏற்பட்டு முழு குணமடைந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முதன்முறையாக தனது அலுவலகத்துக்கு வந்து பணியை தொடங்கினார்.

போரிஸ் ஜான்சனுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் சிகிச்சை எடுத்து வந்தார்.

ஆனால் கடந்த வாரம் திடீரென லண்டனில் உள்ள புகழ்பெற்ற புனித தாமஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஜான்சனுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதால், அவரை ஐசியுவுக்கு மாற்றியதாகவும், சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

கனடா பிரதமர் ஜஸ்டின் உட்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் தொடர் சிகிச்சையால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். எனினும் அடுத்த சில நாட்களுக்கும் அவர் வீட்டில் இருந்தே ஓய்வெடுப்பார் எனவும், எந்த பணியிலும் ஈடுபட மாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி வீட்டில் இருந்தபடியே அவர் ஓய்வெடுத்ததுடன், தனது அலுவலக பணிகளையும் கவனித்து வந்தார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் உரையாடுவது, கரோனா தடுப்பு நடவடிக்கை செயல்பாடுகள் பற்றி ஆலோசிப்பது போன்றவற்றை செய்து வந்தார்.

இந்தநிலையில் முழு குணமடைந்த நிலையில் அவர் முதன்முதலாக தனது அலுவலகத்திற்கு வந்தார். லண்டன் டவுனிங் சாலையில் உள்ள அலுவலகத்திற்கு வந்த அவரை ஊழியர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். பின்னர் அவர் தனது பணிகளை கவனித்தார். பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் உரையாடினார். அவர் முழுமையாக குணமடைந்துள்ளதால் இனி வழக்கம்போல் செயல்படுவார் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x