Published : 25 Apr 2020 11:13 AM
Last Updated : 25 Apr 2020 11:13 AM

வடகொரியாவுக்கு மருத்துவக் குழுவை அனுப்பிய சீனா

கிம்மின் உடல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், வடகொரியாவுக்கு நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா அனுப்பியுள்ளது.

உலக நாடுகள் கரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருந்த சூழலில் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது வடகொரியா.

சீனாவுக்கு மிக நெருக்கமான வடகொரியா எவ்வாறு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று உலக நாடுகள் கேள்வி எழுப்ப, நாங்கள் வைரஸ் பரவல் தொடங்கிய உடனேயே எல்லையை மூடிவிட்டோம் என்று விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் சமீப நாட்களாக வெளி உலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்கின் பிறந்த தினக் கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011-ம் ஆண்டு அதிபராக வந்தபின் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்தார்.

சமீபத்தில் அவருக்கு நடந்த இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்க உளவுத்துறையும் இதைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

வடகொரிய அதிபர் கிம் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதுகுறித்து சீன அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x