Last Updated : 23 Apr, 2020 09:04 AM

 

Published : 23 Apr 2020 09:04 AM
Last Updated : 23 Apr 2020 09:04 AM

அமெரிக்க கரோனா பலி எண்ணிக்கை 47,000-த்தைக் கடந்தது; இது ஃப்ளூ அல்ல, நாட்டின் மீதான தாக்குதல் : அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 47,000த்தையும் கடந்து சென்றது, பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 8,52,000 ஆக உள்ளது.

இதனையடுத்து அதிபர் ட்ரம்ப், ‘இது சாதாரண ஃப்ளூ காய்ச்சல் அல்ல, நம் நாட்டின் மீதான தாக்குதலாகும் இது’ என்று தெரிவித்துள்ளார்.

“நாம் தாக்கப்பட்டுள்ளோம், நம் மீதான தாக்குதலாகும் இது. வெறும் ஃப்ளூ அல்ல, யாரும் இதுவரை இப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை, 1917 கடைசி முறையாகப் பார்த்திருக்கலாம்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு பல கோடி டாலர்கள் நிவாரணம் அவசியமானது, நாம் வேறு என்ன செய்வது, வேறு வழி இருக்கிறதா என்ன? நான் அனைத்தையும் பற்றி கவலைப்படுபவன் நாம் இப்போது இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும்.

உலக வரலாற்றில் நம் பொருளாதாரம் மிகப்பெரியதாகும். சீனாவைவிடவும் பெரிது, ஏன் உலகில் அனைத்தையும் விடப்பெரியது.

கடந்த 3 ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்டு வந்தது, ஆனால் திடீரென அவர்கள் வருகிறார்கள், அனைத்தையும் மூட வேண்டும் என்கிறார்கள். இப்போது நாம் மீண்டும் திறக்கப்போகிறோம். நாம் இன்னும் கூடுதல் வலுவை நோக்கிச் செல்வோம். ஆனால் மீண்டும் திறப்பதற்கு முன்னால் அரசு தரப்பிலிருந்து பணம் செலவழிக்கப்பட வேண்டும் அதற்காகத்தான் இந்த ட்ரில்லியன் டாலர்கல் நிதி நிவாரண அறிவிப்பு.

நாம் நம் விமானப்போக்குவரத்தைக் காப்பாற்றினோம் 2 மாதங்களுக்கு முன்பாக பிரமாதமாக இருந்த நம் நிறுவனங்கள் பலவற்றை காத்திருக்கிறோம். ஆனால் தற்போது சந்தையில் இவர்கள் இல்லை, காரணம் லாக்டவுன்.

சமீபத்திய வைரஸ் ஹாட்ஸ்பாட்கள் நிதானத்துக்கு வருகின்றன. சரியான பாதையில் அவை செல்கின்றன. பாஸ்டன் பகுதியில் கரோனா தொற்றுக்கள் குறையத் தொடங்கியுள்ளன. சிகாகோவிலும் கரோனா அதிகரிப்பு இல்லை. டெட்ராய்ட் கரோனா உச்சத்திலிருந்து மீண்டு வருகிறது.

இவையெல்லாம் வைரஸை எதிர்த்து நமது ஆக்ரோஷமான நடைமுறைகள் பயனளிப்பதையே உறுதி செய்கின்றன. அதிக மாகாணங்கள் லாக் டவுனிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து திறக்கும் நிலைக்கு வருவதற்கான அறிகுறிகள் இவை. இது உற்சாகமளிக்கிறது.

மாகாண கவர்னர்கள் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக டெஸ்ட்டிங் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், வயதானவர்கள், குறைந்த வருவாய் அமெரிக்கர்கள், சிறுபான்மையினர், மற்றும் பூர்வக்குடி அமெரிக்கர்கள் ஆகியோருக்கும் பயனளிக்கும் விதமான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. வளமும் செல்வமும் மீண்டும் மீட்டமைக்கப்படும் வரை எனக்கு ஓய்வில்லை, முன்பு இல்லாததை விடவும் பொருளாதார ரீதியாக எழுச்சி பெறுவோம்.

நிறைய பேர் இதற்கு சவால் அளிக்கின்றனர். பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவில் 1600 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சைக்கு கையெழுத்திட்டுள்ளனர். கரோனா சிகிச்சை, ஆய்வு ஆகியவற்றுக்காக அமெரிக்கா இதுவரை 7 பில்லியன் டாலர்களை இறக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x