Published : 22 Apr 2020 06:24 PM
Last Updated : 22 Apr 2020 06:24 PM

கிம்மின் உடல் நிலை: மவுனம் காக்கும் வடகொரியா

வடகொரிய அதிபர் கிம்மின் உடல்நிலை குறித்து பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், வடகொரியா எந்த விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறது.

உலக நாடுகள் கரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருந்த சூழலில் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது வடகொரியா.

சீனாவுக்கு மிக நெருக்கமான வடகொரியா எவ்வாறு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று உலக நாடுகள் கேள்வி எழுப்ப, நாங்கள் வைரஸ் பரவல் தொடங்கிய உடனேயே எல்லையை மூடிவிட்டோம் என்று விளக்கம் அளித்தது வடகொரியா.

இந்த நிலையில் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது வடகொரியா. இந்த முறை கரோனாவோ, ஏவுகணைப் பரிசோதனையோ கிடையாது. உலக வல்லரசான அமெரிக்காவை எதிர்த்து கொரியாவிலிருந்து குரல் கொடுத்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைப் பற்றியது.

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கிம்முக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கிம்மின் உடல் நிலை மோசமானதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் சில நாட்களுக்கு முன்னர் வடகொரியா நடத்திய ஏவுகணைச் சோதனைகளிலும், வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தினக் கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜோங் உன் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிம்மின் உடல் நிலைக்கு என்ன ஆனது என்று உலக நாடுகள் கேள்வி எழுப்பத் தொடங்கின.

இதற்கிடையில் கிம்முக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது உண்மை என்றும், ஆனால் அவர் உடல்நிலையில் பாதிப்பு இல்லை என்றும் வடகொரியாவின் அண்டை நாடான தென்கொரியா தற்போது தெரிவித்துள்ளது.

ஆனால், இதுவரை வடகொரியாவின் அரசு ஊடகத் தரப்பிலிருந்து கிம்மின் உடல் நிலை குறித்து அதிகாரபூர்வமான செய்தி இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x