Published : 02 Aug 2015 11:40 AM
Last Updated : 02 Aug 2015 11:40 AM
விஞ்ஞானியும் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவருமான ஏபிஜெ அப்துல் கலாம் சிறந்த ராஜதந்திரி என்று ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் தனது இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த ஜூலை 27-ம் தேதி ஷில்லாங் ஐஐஎம்மில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த அப்துல் கலாம், திடீரென மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அலுவலகத்தில், கலாமுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு வசதியாக ஒரு புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு நாட்டு தூதர்கள் கலாமுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் அந்தப் புத்தகத்தில் நேற்று முன்தினம் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக பதவியில் இருந்தபோதும் அதற்குப் பின்னரும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். இதன் காரணமாக அவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து இரங்கல் செய்தி குவிந்தவண்ணம் உள்ளது.
சிறந்த ராஜதந்திரியாக விளங்கிய அவருக்கு இந்திய மக்களோடு இணைந்து ஐநா சபையும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT