ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த சிங்கப்பூர்

ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த சிங்கப்பூர்
Updated on
1 min read

ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை சிங்கப்பூரில் பகுதி நேர ஊரடங்கு நீடிக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் லீ செய்ன் லூங் இன்று அறிவித்தார்.

எனினும் தற்போது வரை முக்கிய இடங்களில் மக்கள் கூடுவது பிரச்சினையாகவே உள்ளது. அனைத்து சிங்கப்பூர் மக்களும்
விட்டிலேயே இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் மூடப்படலாம் என்று சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரில் இதுவரை சுமார் 8,014 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் பலியாகியுள்ளனர்.

தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட குறைவான ஊதியம் பெறும் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலும் கட்டுமானம் மற்றும் உணவு விடுதிகளில் வேலை செய்து வருகின்றனர்.

இத்தகைய ஊழியர்கள் மிக நெருக்கடியான தங்கும் விடுதிகளில் கூட்டமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களிடத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

24,81,528 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,47,734 பேர் குணமடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in