Published : 20 Apr 2020 08:03 PM
Last Updated : 20 Apr 2020 08:03 PM

ஹாங்காங்கில் 3 மாதங்களுக்குப் பிறகு புதிதாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை

ஹாங்காங்கில் ஜனவரி மாதம் முதல் கரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில் இன்றைய தினத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

முன்னதாக மார்ச் 5-ம் தேதி புதிதாக எவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. 75 லட்சம் அளவில் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் ஹாங்காங், சீனாவின் சிறப்பு ஆளுகைக்கு கீழ் இருந்து வருகிறது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு பரவலாகத் தொடங்கியது.

ஹாங்காங்கில் ஜனவரியில் கரோனா தொற்று தீவிரம் கண்டது. இதுவரையில் 1,026 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதில் நான்கு பேர் உயிரழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பை எதிர்கொண்ட நாடுகளில் தினமும் சராசரியாக 1,000க்கும் மேற்பட்ட அளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அவற்றுடன் ஒப்பிடுகையில் ஹாங்காங்கில் நோய்த் தொற்று தீவிரம் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் சமூக இடைவெளியைத் தீவிரமாகப் பேணும்படி ஹாங்காங் அரசு அதன் மக்களை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலோர் வீடுகளிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர். வணிக வளாகங்களில் கூட்டம் மிகக் குறைவான அளவில் உள்ளன.

ஏப்ரல் 23-ம் தேதி வரை பொது இடங்களில் நான்கு பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளன. வெளிநாட்டு விமானங்களுக்கான நிலையங்கள் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x