Published : 18 Apr 2020 02:22 PM
Last Updated : 18 Apr 2020 02:22 PM

இது சுவிட்சர்லாந்து பரிதாபம்! - கரோனாவுக்கும் வேலையிழந்தவர்களுக்கும் இடையில் போட்டி!

சுவிட்சர்லாந்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை விட, கடந்த 30 நாட்களில் வேலையிழந்தவர்கள் மற்றும் வேலைநேரக் குறைப்பால் தங்கள் வருவாயை இழந்தவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

சுவிட்சர்லாந்தின் கரோனா லாக் டவுனிலிருந்து மூன்று கட்டங்களாக ஊரடங்கைத் தளர்த்துவது பற்றிய அறிவிப்புக்களை அந்நாட்டு அரசு நேற்று வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் நாட்டின் தலைநகரான பேர்னில் அரசு சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில் சுவிஸின் பொதுச்சுதாதரத் துறையான ‘ஃபொப்’-ன் (Federal Office of Public Health of the Swiss Confederation) தலைமைப் பிரதிநிதி டேனியல் கோச், மற்றும் தொழிலாளர் இயக்குநரகமான ‘செகோ’-ன் (SECO-State Secretariat for Economic Affairs SECO) தலைவர் போரிஸ் ஸுர்ச்சர் ஆகிய இருவரும் முக்கிய பிரதிநிதிகளுடன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பத்திரிகையாளர்கள் மத்தியில் டேனியல் கோச் பேசும்போது, “ நாட்டில் தற்போது மொத்தம் 27 ஆயிரத்து 78 பேருக்கு கரோனா தொற்றுக்கள் உள்ள நிலையில், 1327 பேர் மரணித்துள்ளனர். இறப்புகள் குறைத் தொடங்கியுள்ள அதேநேரம், தொற்று விகிதம் கணிசமாகச் சரிந்து வருகிறது. இதை வைத்து சுவிஸுக்கு ஆபத்து நீங்கிவிட்டது என்று சொல்லிவிடமுடியாது. நோய் எதிர்ப்பு சக்தி மிக்க இளைஞர்களும் இங்கே தொற்றுக்கு ஆளாவது இந்த வைரஸின் தீவிர ஆற்றலை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அதனால்தான் மக்களிடம் முழுமையான ஒத்துழைப்பைக் கேட்டோம்” என்றவர். “பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கரோனாவின் கேரியர்கள் அல்ல; அவர்களில் பெரும்பாலானவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாக மாட்டார்கள், எனவே தொடக்கப் பள்ளிகளை விரைவாக மீண்டும் திறப்பது பற்றிய முடிவை விரைவில் அறிவிப்போம் என்றார்.

அடுத்துப் பேசிய ‘செகொ’வின் தலைவர் போரிஸ் ஸுர்ச்சர், “ வேலை நேரத்தை அதிரடியாகக் குறைத்தது மற்றும் பணியிலிருந்து நிரந்தமாக விடுவித்தது ஆகிய காரணங்களால் வேலையின்மையும் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாட்டில் வேகமாக அதிகரித்து வருகிறது, மார்ச் 15 தொடங்கி தற்போதுவரை வேலையற்றோர் மற்றும் வேலையிழந்தோர் எண்ணிக்கை தற்போது 1,51,000 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 33,000 பேர் வேலையிழந்துள்ளனர். அதை அரசுக்கு முறையாகத் தெரிவித்திருக்கிறார்கள்” என்றார். கரோனாவால் தொற்றாளர்களை விட வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது சுவிட்சர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகளுக்கு வரும் நாட்கள் எவ்வளவு சவாலாக இருக்கப்போகிறது என்பதற்கான அறிகுறி எனலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x