Published : 17 Apr 2020 01:26 PM
Last Updated : 17 Apr 2020 01:26 PM

இரண்டாம் உலகப்போரின் 75-ம் ஆண்டு தினம்; ரஷ்யாவின் வெற்றி விழா ஒத்திவைப்பு

கரோனா வைரஸ் காரணமாக இரண்டாம் உலகப் போரின் வெற்றி அணிவகுப்பை ரஷ்ய அதிபர் புதின் ஒத்தி வைத்துள்ளார்.

உலக நாடுகளைக் கடந்த மூன்று மாதங்களாக கரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வரருகிறது. இதன் காரணமாக பல முக்கிய நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படையை ரஷ்யா வென்றதை நினைவுகூரும் வகையில், 75-வது ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு 2020 மே மாதத்தில் ராணுவ அணிவகுப்பு விழாவை மாஸ்கோவில் விமரிசையாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டது. இந்த நிலையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரஷ்யாவில் இரண்டாம் உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக புதின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதின் கூறும்போது, “ மே 9 ஆம் தேதி அன்று மக்கள் பெரும் திரளாகக் கூடுவது ஆபத்தானது. கரோனா தொற்றால் இணைக்கப்பட்டுள்ள அபாயங்கள் அதிகம். இந்தச் சூழலில் அணிவகுப்பு மற்றும் பிற விழாக்களுக்கான தயாரிப்புகளைத் தொடங்குவதற்கு நான் உத்தரவு அளிக்க விரும்பவில்லை. கொண்டாட்டங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

ரஷ்யாவில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றுக்கு 27,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். ரஷ்யாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அதிபர் புதின் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்.

கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 21, 83,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1, 46,870 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x