

கரோனா வைரஸ் பரவலுக்கு இடையே தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தலைமையிலான ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தள்ளி வைத்துள்ள நிலையில், அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் தென்கொரியா புதன்கிழமையன்று நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியது.
பிப்ரவரியில் தென்கொரியாவில் கரோனா வைரஸ் நோயின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டது. தற்போது கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தென்கொரியா வெற்றி கண்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்களித்தனர். நாட்டின் 300 இடங்களில் நடைபெற்ற இத்தேர்தலில் 65% வாக்குகள் பதிவாகின. இதில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் திறமையாகக் கையாண்டு கட்டுப்படுத்தியதன் விளைவாக மூன் ஜே இன்னுக்கு கொரிய மக்கள் வெற்றியை அளித்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரோனா வைரஸ் காரணமாக தென்கொரியாவில் 10,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 225 பேர் பலியாகியுள்ளனர்.