Last Updated : 16 Apr, 2020 10:36 AM

 

Published : 16 Apr 2020 10:36 AM
Last Updated : 16 Apr 2020 10:36 AM

கரோனாவின் உச்ச உயிரிழப்பையும், பாதிப்பையும் அமெரிக்கா கடந்துவிட்டது; இம்மாதம் ஊரடங்கு தளர்த்தப்படும்: அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை

கரோனா வைரஸால் அமெரிக்கா உச்ச உயிரிழப்பை சந்தித்து கடந்துவிட்டது, பெரும்பாலான மாநிலங்களில் இந்த மாதத்துக்குள்ளே பொருளாதார செயல்பாட்டுக்கான வழிகள் திறக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவி்த்துள்ளார்

கரோனா வைரஸுக்கு அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,569 பேர் உயிரிழந்துள்ளனர், இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவில் குறைந்தபட்சம் 1,900 பேர் நாள்தோறும் உயிரிழந்து வருகின்றனர்

அமெரிக்காவில் நேற்று மட்டும் புதிதாக 30 ஆயிரத்து 206 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது, இதனால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6.44 லட்சமாக அதிகரித்துள்ளது. 48 ஆயிரத்து 700 பேர் இதுவரை கரோனாவாலிருந்து குணமடைந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் “ கரோனா வைரஸால் அமெரிக்கா உச்சபட்ச உயிரிழப்பையும், பாதிப்பையும் பார்த்து கடந்துவி்ட்டது. பல மாநிலங்களில் பொருளாதார இயல்புநிலைக்காக இம்மாத இறுதியில் தடைகள் தளர்த்தப்பட்டு திறக்கப்படும்.

அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அரசு அறிவிக்கும். அமெரிக்கா மீண்டு வரும், நம்புவோம், நம்நாட்டை மீண்டும் எழுச்சிக்கு கொண்டுவர வேண்டும். நமக்கு தொடர்ந்து வளர்ச்சி இருக்கிறது என நம்புவோம். இதுவரை 33 லட்சம் கோவிட்-19 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன, விரைவில் நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது. அமெரிக்கா மிகவும் வலிமையாக இருக்கிறது, விரைவில் இயல்புநிலைக்கு வருவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் மக்களுக்கு அறிவிக்கப்படும்.

மே 1-ம் தேதிதான் இயல்புநிலைக்கு மாநிலங்கள் வரும் எனத் தெரிவித்திருந்தேன். ஆனால், பல மாநிலங்கள் இம்மாத இறுதிக்குள் ஊரடங்கு தடைகளைத் தளர்த்த தயாராகிவிட்டன. தடைகளைத் தளர்த்தினாலும் உயிரிழப்பு ஏற்படும் என்றால், ஊரடங்கு இருந்தாலும் காலப்போக்கில் உயிரிழப்பு ஏற்படும்.

பல அமெரிக்க மக்களுக்கு வேலைபறிபோய்விட்டது, வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பதால் மனரீதியான சிக்கல்கள், பொருளாதார பாதிப்பு, அதிகமான தற்கொலைகள் நடக்கும். இதைத் தடுக்கவே மாநிலங்கள் தடைகளைத் தளர்த்துகின்றன.

நாடுமுழுவதும் மிகப்பெரிய அளவில் மருந்துகளை வழங்கி இருக்கிறோம். 44 விமானங்களில் மருந்துகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. 3.94 கோடி என்95 முகக்கவசங்கள், 4.31 கோடி கையுறைகள், 5.7 கோடி சர்ஜிகல் முகக்கவசம், 1.20 கோடி கவசஆடைகள் வழங்கப்பட்டுள்ளன. 50 கோடி முகக்கவசம் வர உள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மிகவும் முக்கியம், மக்களுக்கு நம்பிக்கையூட்ட அந்த தடூப்பூசி கண்டுபிடிப்பது கட்டாயம்அதற்கான பணிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது.
இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x