Published : 15 Apr 2020 05:11 PM
Last Updated : 15 Apr 2020 05:11 PM

உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுத்திய ட்ரம்ப்: சீனா கவலை

உலக சுகாதார அமைப்புக்கு நிதி வழங்குவதை நிறுத்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தீவிரக் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு தனது அடிப்படைக் கடமையிலிருந்து நழுவிவிட்டதாகவும், சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டிய ட்ரம்ப், அந்த அமைப்புக்கு அமெரிக்கா சார்பில் நிதி வழங்குவதை நிறுத்திவிட்டார்.

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்கா நிதியை நிறுத்துவதற்கு உகந்த நேரம் இதுவல்ல என்று ஐ.நா. கவலை தெரிவித்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் முடிவுக்கு சீனாவும் கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிய நிதியை நிறுத்திய அமெரிக்காவின் முடிவு தீவிரக் கவலையை அளித்துள்ளது. இது ஒரு முக்கியமான தருணம். அமெரிக்காவின் முடிவு உலக சுகாதார அமைப்பின் திறன்களை பலவீனப்படுத்தும். தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பைக் குறைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் அங்கு ஏற்படுத்திய பாதிப்பை விட அமெரிக்காவில் அதிகம் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 6 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது என்று தொடக்கத்தில் அறிவித்த உலக சுகாதார அமைப்பு, ஜனவரி மாதத்துக்குப் பின்புதான் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் என்று கூறியது. தொடக்கத்திலேயே சீனாவில் ஆய்வு செய்திருந்தால் அமெரிக்காவில் பெருத்த உயிரிழப்பைத் தடுதது நிறுத்தியிருக்கலாம் என்று அமெரிக்க ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x