சீனாவின் வூஹானில்  அடக்கி ஒடுக்கப்பட்ட கரோனா : கடைசி மருத்துவக் குழு நகரை விட்டுப் புறப்பட்ட போது மக்கள் கையை அசைத்து உற்சாக பிரியாவிடை

சீனாவின் வூஹானில்  அடக்கி ஒடுக்கப்பட்ட கரோனா : கடைசி மருத்துவக் குழு நகரை விட்டுப் புறப்பட்ட போது மக்கள் கையை அசைத்து உற்சாக பிரியாவிடை
Updated on
1 min read

கரோனா மையமாகத் திகழ்ந்த சீனாவின் ஹூபேய்யிலிருந்து 3 மாதங்களாக அயராது மக்கள் பணியாற்றிய மருத்துவ உதவிக்குழு, இனி அங்கு தேவையில்லை, கரோனாவிலிருந்து மீண்டதாக மாகாணத்திலிருந்து வெளியேறியது ,அவர்க்ளுக்கு கையை அசைத்து வாழ்த்தி உற்சாகப் பிரியாவிடையை மக்கள் அளித்தனர்.

பீகிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சுமார் 180 பேர் கொண்ட மருத்துவக் குழு ஜனவரி 26 அன்று வூஹான் வந்தது. இதில் 179 பேர் வூஹானிலிருந்து வெளியேறினர், காரணம் அங்கு கரோனா அடக்கி ஒடுக்கப்பட்டது.

சிறிய அளவில் நோயாளிகள் இன்னமும் முழுதும் குணமடையாத நிலையில் உள்ளனர். இவர்களுக்கு உதவ சிறிய குழு மட்டும் இன்னும் உள்ளது இவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்று டாங்ஜி மருத்துவமனை மருத்துவர் குவோ ஃபேன் என்பவர் சினுவா செய்தி ஏஜென்சிக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “என் குடும்பத்தினரைப் பார்த்தே 80 நாட்கள் ஆகிறது. என் குடும்பத்தினரை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

வூஹானில் ஸோங்கே சர்வதேச விடுதியில் இன்று காலை மருத்துவக் குழுவிற்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது.

விடுதியின் சமையலறை உதவியாளர் ஒருவர் கூறும்போது, “இவர்கள் அனைவரும் இரவு பகல் பாராது உழைத்தனர். சில காலை உணவு சாப்பிடும்போதே தூங்கி விழுவதைப் பார்த்திருக்கிறேன், நமது இதயம் கனிந்த நன்றிக்கு உரித்தானவர்கள்” என்றார்.

பிரியாவிடை முடிந்து இவர்கள் வாகனத்தில் புறப்பட்ட போது போலீஸ் காவல் வாகனப் பாதுகாப்புடன் சென்றனர், தெருக்கள் முழுதும் மக்கள் நின்று இவர்களுக்கு கையை அசைத்து உற்சாகமூட்டி தங்கள் நன்றிகளைப் பதிவு செய்தனர்.

ஹூபேய்க்கு மட்டும் சுமார் 42,000 மருத்துவ பணியாளர்கள் வந்து அயராது பணியாற்றியுள்ளனர். இவர்கள் பேட்ச் பேட்ச் ஆக ஹூபேயிலிருந்து மார்ச் 17லிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். மக்கள் இவர்களை நன்றிக்கடனுடன் பார்த்து கையை அசைத்து உற்சாகமூட்டியதாக சினுவா செய்தி ஏஜென்சி தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in