Published : 14 Apr 2020 06:27 AM
Last Updated : 14 Apr 2020 06:27 AM

கரோனா வைரஸால் 19 லட்சம் பேர் பாதிப்பு; உயிரிழப்பு 1.15 லட்சத்தை தாண்டியது: இத்தாலி, ஸ்பெயினில் ஊரடங்கு தளர்வு

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்தை நெருங்குகிறது. உயிரிழப்பு 1.15 லட்சத்தைத் தாண்டியது. ஸ்பெயினில் பாதிப்பு குறைந்து வருவதால் நேற்று ஊரடங்கு விலக்கப்பட்டது. இத்தாலியிலும் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயினில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த நாட்டில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 14-ம் தேதி ஸ்பெயினில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. நாளொன்றுக்கு 1,000 பேர் உயிரிழந்த நிலையில் ஊரடங்கால் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு உயிரிழப்பும் குறைந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து ஸ்பெயினில் நேற்று ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வழக்கம்போல செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் சமூக விலகலை கண்டிப்புடன் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியில் ஊரடங்கு தளர்வு

இத்தாலியில் கடந்த மார்ச் 9-ம் தேதி ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அந்த நாட்டில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. இதன்படி புத்தக விற்பனை நிலையங்கள், குழந்தைகளுக்கான ஆடை விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் அடுத்த வாரம் அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஜெர்மனியில் வரும் 19-ம் தேதி ஊரடங்கு நிறைவடைகிறது. அதன் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன், பிரான்ஸில் அடுத்தசில வாரங்கள் ஊரடங்கு தொடர்ந்துஅமலில் இருக்கும் என்று அந்த நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிபர் ட்ரம்ப் திட்டம்

அமெரிக்காவில் கரோனா வைரஸால் நேற்று முன்தினம் 1,510 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் அந்த நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 22,129 ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை வரும் மே 1-ம் தேதி நீக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் விரைவில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் கிரெக் ஹண்ட் தெரிவித்துள்ளார். நியூஸிலாந்தில் வரும் 20-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் கரோனா

சீனாவின் ஹுபெய் மாகாணம் வூஹானில் கரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் சீனர்களால் அந்த நாட்டில் மீண்டும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 108 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

எனவே வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு திரும்புவோரை தனிமைப்படுத்துவது மட்டுமன்றி அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவும் சீன அரசு முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்தை நெருங்குகிறது. இதுபோல உயிரிழப்பு 1.15 லட்சத்தைத் தாண்டி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x