Last Updated : 13 Apr, 2020 05:10 PM

 

Published : 13 Apr 2020 05:10 PM
Last Updated : 13 Apr 2020 05:10 PM

கோவிட்-19 தொற்றைச் சமாளித்ததில் ஒருசில நாடுகள்தான் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன: பில்கேட்ஸ் 

கரோனா தொற்றைக் கையாண்ட விதத்தில் ஒருசில நாடுகள் மட்டுமே அதன் பாதிப்பை ஒழுங்காகப் புரிந்து, கணித்துக் கையாண்டுள்ளன என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் பில்கேட்ஸ் கூறுகையில், ''முறையான சுகாதாரத்தை அளிக்க ஒரு சில நாடுகள் தவறிவிட்டன. இந்தத் தொற்றுப் பிரச்சினை முடிந்த பிறகு நிறைய சுய பரிசோதனை செய்யும் நிலை ஏற்படும்.

கரோனா தொற்றைக் கையாண்ட விதத்தில் ஒருசில நாடுகள் மட்டுமே அதன் பாதிப்பை ஒழுங்காகப் புரிந்து, கணித்துக் கையாண்டுள்ளன. சரியான முதலீடுகளும், இப்படியான தொற்றுக்குச் சரியான தயாரிப்பும் இல்லாமல் போனதால் நாம் திக்கு தெரியாத நிலையில் இருக்கிறோம்" என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை காலை வரை அமெரிக்காவில் 5.5 லட்சம் நோயாளிகளுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 18 லட்சம் பேருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 1.14 லட்சம் மக்கள் இதனால் மரணமடைந்துள்ளனர்.

கரோனா கிருமி தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்க பில்கேட்ஸின் அறக்கட்டளை நிதி அளித்து வருகிறது. இந்த 7 மருந்துகளில் சிறந்த இரண்டு மருந்துகள் கடைசி கட்ட பரிசோதனைக்குச் செல்லும். இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை உருவாக்கவும் கேட்ஸின் அறக்கட்டளை நிதி அளிக்கிறது.

இந்தத் தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதித்துப் பார்க்க 12-18 மாதங்கள் வரை ஆகும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வளர்ந்த நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு உதவுவதோடு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் உதவ வேண்டும் என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதமே, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, தேசிய அளவில் கரோனா தொற்றை எதிர்த்துப் போராட 100 மில்லியன் டாலர்களைத் தரும் என்று அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x